Thursday, November 26, 2009

இலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை

நேற்று திடிரென்று நண்பர் butterfly சூர்யா விடமிருந்து தொலைபேசி அழைப்பு.. காலையில் பெரும்பாலும் அழைக்க மாட்டார். ஒரு முக்கியமான செய்தி என்றார். அப்போது வெளியில் இருந்ததால் வாகன இரைச்சலில் சரியாக கேட்கவில்லை மீண்டும் அழைப்பதாக சொல்லி போனை வைத்து விட்டர்.. கொஞ்சம் டென்ஷனாகி போனேன்.

மீண்டும் மதியம் அழைத்து இலங்கை ஷக்தி பண்பலைக்காக ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றார். அவர்களே மாலை அழைத்து ஒலிப்பதிவு செய்வார்கள் என்றார்.
மாலை அழைத்து ஒலிப்பதிவும் செய்தார்கள்.. மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி பற்றிய தகவல்:
வானொலி : "சக்தி" பண்பலை
அலைவரிசை : கொழும்பு & கிழக்கு: 105.1 கண்டி: 91.50
கிழமை : ஞாயிறு
நாள் : 29/11/2009
நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை..
நிகழ்ச்சியின் பெயர்: அன்னைக்காக

”அம்மா என்றொரு தேவதை” என்ற பெயரில் ஒரு கவிதை வாசித்து இருக்கிறேன்.
ஆனால் என் குரலை நானே இங்கு (இந்தியாவில்) கேட்க இயலாது என்று நினைக்கிறேன். இலங்கை நண்பர்கள் கேட்டுவிட்டு கருத்தை கூறுங்கள்.
ஒலி நாடா வந்ததும் பதிவில் சேர்க்கிறேன்.
என் பெயரை பரிந்துரைத்த நண்பர் சூர்யாவிற்கும் வாய்ப்பளித்த ஷக்தி பண்பலைக்கும் மிக்க நன்றி.
டிஸ்கி: இந்த ஒலிப்பதிவில் என் மானசீக குரு வைரமுத்துவும், கவிஞர். பா.விஜய் அவர்களின் கவிதையுடன் என் கவிதையும் இடம் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.

Tuesday, November 24, 2009

வேட்கையின் நிறங்கள்




1.
வளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது.கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா.பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.
என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள்
என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?

"என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?" நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. "ஒண்ணுமில்ல நதி...சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?" அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.

"ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்" என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.

2.
ப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.
வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.

ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.

மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன்.கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது.என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.

3.



மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.
ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.

கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.

நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?

4.

ன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.

அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.
என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.

மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.

5.

கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது.கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.
மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.

நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும்.இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.
தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.

அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

-நிலாரசிகன்.

Monday, November 23, 2009

நவம்பர் 23


புன்னகை தொலைந்து
சில மாதங்களாயிற்று.
இன்றேனும்
மலர்ந்திருக்கட்டும்
புன்னகை மறந்த இதழ்கள்.

Sunday, November 22, 2009

சச்சின்,அ.முத்துலிங்கம்,திருச்செந்தாழை

சி மாதங்களுக்கு முன்பு பிலெடெல்பியாவில் இந்திய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது இரு அமெரிக்கர்கள் இது என்ன விளையாட்டு என்று கேட்டார்கள்.அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்துவிட்டு அவர்களையும் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கொண்டோம். பேஸ்பால் பந்தை எறிவதுபோல் அவர்கள் பவுலிங் செய்தது நகைப்பாக இருந்தது. விளையாடி முடித்த பின்னர் புல்தரையில் ஓய்வெடுக்க அமர்ந்திருந்தபோது ஒரு மூதாட்டி தன் செல்ல நாயுடன் அருகில் வந்தார். எல்லோரும் கிரிக்கெட் சிறப்பாக விளையாடினீர்கள் நான் தூரத்திலிருந்து ரசித்தேன் என்றார். எங்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

அவர்
ஒரு அமெரிக்க மூதாட்டி. அவருக்கு எப்படி கிரிக்கெட் தெரிந்தது? விசாரித்தவுடன் அவர் சொன்னவிஷயம் கேட்டு எங்ளுடன் விளையாடிய மற்ற இரு அமெரிக்கர்களே வியந்துபோனார்கள். அந்த மூதாட்டியின் பேரன் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். அவனுக்கு கிரிக்கெட் அறிமுகமானது அங்கேதான். அது மட்டுமின்றி சச்சினின் தீவிர ரசிகன் அவன். விடுமுறைக்கு அமெரிக்கா வந்தபோது சச்சின் விளையாடிய போட்டி ஒன்றின் டிவிடியை கொண்டு வந்திருக்கிறான். தன் பாட்டிக்கு கிரிக்கெட் பற்றியும் சச்சின் பற்றியும் சொல்லி இருக்கிறான். அந்த மூதாட்டி விடைபெறும் போது சொன்னார் "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறேன் - சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் பார்க்க".

கிரிக்கெட்
வாசமே இல்லாத அமெரிக்காவில் சச்சின் பற்றி தெரிந்திருக்கிறதென்றால்,இதற்கு மேல் சச்சின் பற்றி என்ன சொல்ல? 30,000 சர்வதேச ரன்கள். டபிள்யூ.ஜி.கிரேஸ்,ஜேக் ஹாப்ஸ்,பிராட்மேன்,பாய்க்காட்,க்ரகாம் கூச் இவர்களெல்லாம் முதல்தர போட்டிகளில் பல ஆயிரம் ரன்களை கடந்தது நூற்றிற்கும் மேற்பட்ட சதங்களை அடித்தவர்கள். 16 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துவிட்டதால் அதிக முதல்தர போட்டிகளில் சச்சின் விளையாடியதில்லை. ஆனால் முப்பதாயிரம் ரன்கள் சர்வதேச அணிகளுக்கு எதிராக எடுத்திருக்கிறார் எனில் சந்தேகமின்றி பிராட்மேனுக்கு அடுத்த மிகச்சிறந்த வீரர் சச்சின் தான்.சச்சினுக்கு வாழ்த்துகள்.
-------------------------------------------------------------------------

ந்த வார ஆனந்த விகடனில் எழுத்தாளர் .முத்துலிங்கம் சிறுகதை "புதுப் பெண் சாதி" வெளியாகி இருக்கிறது. ஒரு நாவலை சிறுகதையாக எழுதி இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் ஒரு மளிகை கடை வைத்திருப்பவனின் மனைவியை பற்றிய கதை. கதையினூடாக இலங்கையின் அன்றைய நிலவரத்தை(1989) சுட்டிக்காட்டிய விதம் அருமை. கதையின் முடிவும் ரசிக்கும்படி இருந்தது. கச்சிதமாக சிறுகதை எழுத இந்தக்கதையை உதாரணமாக சொல்லலாம்.

ஆனந்த
விகடனுக்கு ஒரு கேள்வி. நட்சத்திர எழுத்தாளர்கள் ஏற்கனவே பெயர் பெற்றவர்கள். அவர்களது படைப்புகளை கேட்டு வாங்கி வெளியிடுவதில் என்ன பயன்? இளம் எழுத்தாளர்களுக்கு .வி ஒரு களமாக செயல்படலாமே?
---------------------------------------------------------------------------

பா.திருச்செந்தாழையின் "வெயில் நண்பன்,பிராத்தனை ஒரு பிரதேசம்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இவரது மொழி வசீகரிக்கிறது. ஒவ்வொரு வரியும் கவனமாக செதுக்கப்பட்ட சிற்பமாகவே தோன்றுகிறது.உமா மகேஷ்வரியின் சிறுகதைகளுக்கு பின் தனக்கென தனிமொழியை கையாளும் சிறுகதையாளராக பா.திருச்செந்தாழையை சொல்ல முடியும். பதிவர் மண்குதிரை இந்த நூலை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.பிடித்த வரிகள் சில:

"நினைவுகளின் குப்பைக்கூடையாய் நான் இருப்பதாக உணர்வதற்குச் சில காரணங்களிருக்கின்றன. எந்த வேலையையும் ஆயுளுடன் பிணைத்துக் கனவு காணாமல் அனுபவங்களின் வெவ்வேறு பக்கமாய் மாற்ற முயன்று ஊடுநரைகள் எழத்துவங்கிய இந்த வயதிலும் நிலையற்ற வாழ்வுடனும், திருப்தியுறா மனநிலையுடனும் நகரின் வெவ்வேறு சந்திப்புகளில் சாலையைக் கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சில நிகழ்வுகளின் மெளனசாட்சியாகவும், இன்னும் சிலவற்றின் மையப்புள்ளியாகவும் ஆனவிதம் நிறைகின்றது நாட்களின் பல கணங்கள். "

"""காலம் ஒரு திருடனைப் போல அவளது வனப்புகளைக் களவாடிச் சென்றுவிட்டிருந்தது"


இன்று திருச்செந்தாழையின் திருமணம். வாழ்த்துகள் பல :) --------------------------------------------------------------------------------

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை என்றொரு பதிவு இரு மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். தகிக்கும் கோடை பாலையாக உருப்பெற்றிருக்கிறது.

உடல்
மனம்
இருத்தல்
இயல்பு
எதுவுமற்று
நான்...

-
நிலாரசிகன்.

Friday, November 20, 2009

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன்
நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

-நிலாரசிகன்.

Thursday, November 19, 2009

ஆலம்



பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணா” பேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
“அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவ” சொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.

திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.

சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சே” இடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.

ப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.

நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?

ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே "இனி அங்க வெளயாட போகாத தம்பி" என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.


ரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.

வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி,நந்தியாவட்டை,இருவாச்சி,ஜினியா,வாடாமல்லி,ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.

நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.

-நிலாரசிகன்.

Monday, November 16, 2009

கூடல்திணை - இணைய இதழ்




துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இயங்கிக் கொண்டிருக்கும் யுகமாயினி குழுவிலிருந்து புதிய வரவாக கூடல்திணை இணைய இதழ் வெளிவர உள்ளது. இதன் சிறப்பு அம்சங்களாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது என்னவென்றால்

1.
வலையுலகிற்கு வெளியே கணினி பரிச்சயமற்ற ஏராளமான படைப்பாளிகள் மத்தியிலிருந்து
தேர்வு செய்த படைப்புகளை கூடல் திணை மூலம் வலையுலகில் பதிவு செய்வது,இதன் காரணமாக இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் வகையில் மூத்த படைப்பாளிகளது பங்களிப்பு அமையும்.உதாரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழ் கவிதையுலகை புரட்டி போட்ட ”சனங்களின் கதை” கவிதை தொகுப்பினைப் படைத்த பேராசிரியர் பழமலய்,ஈழத்து மூத்த படைப்பாளி எஸ்பொ,எழுபதுகளிலேயே நவீன எழுத்தை தொட்டு படைப்புலகில் சலனத்தை உண்டாக்கிய இந்திரா பார்த்தசாரதி,தமிழின் முதல் சிற்றிதழான “எழுத்து” துவக்கம் இன்றைய யுகமாயினி வரை,சிற்றிதழ் சேகரிப்போடு சிறந்த விமர்சகராகவும் விளங்கும் வே.சபாநாயகம்,அறிவியற் புனைக்கதையில் விருதுபெற்ற ஏராளமான ஆர்த்தர் சி.க்ளார்க் படைப்புகளை மொழிபெயர்த்த உலோ.செந்தமிழ்க்கோதை இன்னும் பலர் இடம்பெறுவர்.மட்டுமல்லாது இணைய இதழ்களில் தனது எழுத்தால் கவர்ந்த இரா.முருகன் தன்னுடைய மூன்றாவது விரல் புதினத்தின் இரண்டாது பாகத்தை இதில் துவங்குகிறார்.இரா.முருகனை போன்றே இணையயுலகில் பரிச்சயமான ஏராளமானோர் இதில் இடம் பெறுவர்.

2.
யுகமாயினின் கட்டமைப்பை போன்றே கூடல் திணையிலும் மூத்த படைப்பாளிகளுடன் இன்றைய இளம் படைப்பாளிகளும் இடம்பெறுவதோடு அவர்களில் குறிப்பிட்ட சிலர் தேர்வுசெய்யப்பட்டு அச்சு இதழ் யுகமாயினியில் இடம்பெறுவர்.

3.
ஒருங்குறித் தமிழ் எழுத்துருக்களில் இதுவரை எந்த இணைய இதழிலும் பயன்படுத்தாத pdsoftware.in& higopi.com வடிவமைத்துள்ள அலங்கார சிறப்பு ஒருங்குறி எழுத்துருக்களை கூடல்திணை பயன்படுத்தி இருக்கிறது.

4.
இணைய இதழ்களின் வரலாற்றில் கூடல்திணை அடுத்த இலக்கை நோக்கி பயன்படுகிறதென்று இதழ் ஆசிரியர் சித்தன் தெரிவித்தார்.அவருடன் செயலாற்ற அணிற்பிள்ளையாக நானும் இணைந்துள்ளேன்.

தற்போது சோதனை ஓட்டமாக டிசம்பர் 31,2009 வரை செயல்படும் கூடல்திணையின் தற்காலிக முகவரி:

http://viruba.com/chiththan/index.aspx