பதிவர் முத்துக்குமார் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். இதன் விதிமுறைகளை நான் பின்பற்ற வில்லை.(Break the rules!!,
தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற விதிமுறையை மட்டும் ஏற்றுக்கொண்டேன்))
பிடித்தவைகளை மட்டுமே பதிவிடுகிறேன்.
எழுத்தாளர்
பிடித்தவர்:
கண்மணி குணசேகரன்,உமா மகேஷ்வரி
அதிகம் பிடித்தவர்:சுஜாதா,வண்ணநிலவன்
ஓவியர்
பிடித்தவர் : மருது
மிகவும் பிடித்தவர்: கவிஞர்.வைதீஸ்வரன்
*
கவிஞர்
பிடித்தவர்: வைரமுத்து
மிகவும் பிடித்தவர்:கல்யாண்ஜி
*
இயக்குனர்
பிடித்தவர்:ஸ்ரீதர்
மிகவும் பிடித்தவர்: மணிரத்னம்
*
நடிகர்
பிடித்தவர்:ரஜினி
மிகவும் பிடித்தவர்: ரகுவரன்,எம்.என்.நம்பியார்
*
நடிகை
பிடித்தவர்: மீனா
மிகவும் பிடித்தவர்:ஜோதிகா
*
இசையமைப்பாளர்
பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்
மிகவும் பிடித்தவர்: இசைராஜா
*
பாடகர்
பிடித்தவர் : ஜேசுதாஸ்
மிகவும் பிடித்தவர்: ஜெயசந்திரன்
*
பதிவர்
பிடித்தவர்: கேபிள் சங்கர்(வெரைட்டியாக தினமும் எழுதுவதால்,போரடிக்காத எழுத்துக்காகவும்)
மிகவும் பிடித்தவர்: கண்ணாடியில் தெரிபவர்(எனக்கே என்னை பிடிக்கவில்லையெனில் வேறு யாருக்கு
என்னை பிடிக்கும்? :)
*
நான் அழைப்பவர்கள்:
இந்த இடுகைக்கு பின்னூட்டமிடும் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று உங்களுக்கு
பிடித்தவைகளை பதிவிடலாம்.
Thursday, November 12, 2009
உன் மெளனங்கள்

காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.
(மீள்பதிவு)
Tuesday, November 10, 2009
சச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1

ஆஸ்திரேலியா = சச்சின்
ஒருநாள் கிரிக்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி
கட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,"பிக்பேர்ட்"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்
டெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்
நிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் "சோதா" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.
இதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.
இதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)
96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்
வீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.
அதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா? இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.
இப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்
அதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.
உலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே "Boy Wonder" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.
ஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist!
அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூட்டப்பட்டது? ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்!
சச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.
டைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம்? இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்?
எப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.
கடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.
சச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால்? அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினாலும் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.
மீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:
Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives.
- BBC Sports, on Sachin Tendulkar
-நிலாரசிகன்
Labels:
கட்டுரை,
கிரிக்கெட்,
சச்சின்
Sunday, November 08, 2009
மழைப்பெண்

1.
வனப்பு தொலைந்த
மழைநாளில்தான் நிகழ்ந்தேறியது
நம் மரணம்.
குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை.
கிளை முறிந்து ஊனமாகும்
மரங்களின் மெளனம் நான்
உணரவில்லை.
ஒரு பறவை
உதிர்த்து சென்ற இறகை
நனைத்துக்கொண்டே இருக்கிறாள்
மழைப்பெண்.
2.
சப்தம் மரணிக்கும் இரவுகளில்
மயானத்தின் நடுவில்
நடனமாட துவங்குகிறாள்
அவள்.
ஈரம் படிந்த
சாம்பல் மீது ஓயாமல்
தொடர்கிறது அவளது
நடனம்.
கலைந்த கூந்தல்
தோகையென காற்றில்
மிதக்கிறது.
கொன்றைகள் இருநிலவுகளாய்
ஒளிர்கிறது.
கண்களில் நீர்வர ஆடிய பின்
வதங்கிய பூவாய்
தரையில் வீழ்ந்து மரிக்கிறாள்.
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.
Saturday, November 07, 2009
ராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்

ராஜ ராஜ சோழன் பற்றி எடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஆவணப்படமிது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கிரானைட் கற்களால் கட்டப்பட்ட
தஞ்சை பெரியகோவில் பற்றியும் அதற்கான கல்லை அக்காலத்தில் எப்படி அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என்பது பற்றியும் சிறப்பாக விவரித்திருக்கிறார்கள்.
முகலாய படையெடுப்பின் போது அழிவில் இருந்து தப்பிக்க ஏராளமான சிலைகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சியின்போது
1965ல்தான் அவை கண்டெடுக்கப்பட்டன போன்ற முக்கிய செய்திகளையும் தொகுத்திருக்கிறார்கள்.
இந்தியாவை ஆண்ட மிகச்சிறந்த மன்னன் ராஜ ராஜ சோழன் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது இந்த ஆவணப்படம்.
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இங்கே பார்க்கலாம்:
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY
http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU&NR=1
http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns
http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw
http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8
Labels:
ஆவணப்படம்,
சினிமா,
பார்த்ததில் பிடித்தது
Friday, November 06, 2009
சச்சின் எனும் மாவீரன்!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.
முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.
ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.
பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."
தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:
"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"
2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.
விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.
இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.
ஆனால் இன்று?
19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.
சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.
சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.
சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.
சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.
1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!
இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.
வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.
சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.
2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.
ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.
"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."
-நிலாரசிகன்.
Labels:
கிரிக்கெட்,
சச்சின்
Wednesday, November 04, 2009
புன்னகை சிற்றிதழில் கவிதைகள்
இம்மாத "புன்னகை" சிற்றிதழில் வெளியான என் கவிதைகள்:

இதழ் முகவரி:
புன்னகை,
68,பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642104
04253 - 283017
புன்னகை ஆசிரியரின் வலைப்பூ:
http://amsapriyapunnagai.blogspot.com/
இதழ் முகவரி:
புன்னகை,
68,பொள்ளாச்சி சாலை,
ஆனைமலை - 642104
04253 - 283017
புன்னகை ஆசிரியரின் வலைப்பூ:
http://amsapriyapunnagai.blogspot.com/
Labels:
கவிதை,
கவிதைகள்,
பிரசுரமானவை
Tuesday, November 03, 2009
நீங்குதல்...

ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.
Subscribe to:
Posts (Atom)
